சென்னை,
2018-ம் ஆண்டுக்கான இந்திய அழகி போட்டியில் சென்னை கல்லூரி மாணவி அனுகீர்த்தி வாஸ் பட்டம் வென்றார்.
2018-ம் ஆண்டுக்கான பெமினா மிஸ் இந்திய அழகி போட்டி மும்பையில் நடைபெற்றது. 30 மாநிலங்களை சேர்ந்த இளம்பெண்கள் இதில் கலந்துக்கொண்டு பல்வேறு போட்டிகளில் தகுதிப்பெற்றார்கள். போட்டியின் இறுதிச் சுற்று நேற்றிரவு மும்பையில் நடைபெற்றது.
போட்டி பாலிவுட் நடிகைகள் மாதுரி திட்சித், கரீனா, ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோரின் அசத்தலான நடனத்துடன் தொடங்கியது.
அழகிப்போட்டியின் தேர்வாளர்கள் குழுவில் கிரிக்கெட் வீரர்கள் இர்பான் பதான், கே.எல். ராகுல், பாலிவுட் நடிகை மலாய்கா அரோரா, பாபி தியோல், குனால் கபீர் ஆகியோர் இருந்தனர். 30 பேர் கலந்துக்கொண்ட அழகி போட்டியில் வெற்றியாளரை இக்குழு அறிவித்தது.
போட்டியில் சென்னையைச் சேர்ந்த 19 வயதான அனுகீர்த்தி வாஸ் இந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 2017-ம் ஆண்டு இந்திய அழகி பட்டம் மற்றும் உலக அழகி பட்டத்தை வென்ற மனுஷி சில்லார் மகுடம் சூட்டினார்.
ஏற்கனவே எஃப்பிபி கலர்ஸ் ஃபெமினா மிஸ் தமிழ்நாடு 2018 பட்டத்தை வென்ற அனுகீர்த்தி வாஸ் இந்திய அழகி பட்டத்தையும் வென்றார். அனுகீர்த்தி வாஸ் சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. பிரெஞ்ச் படித்து வருகிறார்.
நடிப்பிலும், மாடலிங்கிலும் ஆர்வம் உடைய அனு கீர்த்திவாஸ், இந்த ஆண்டு நடைபெறும் உலக அழகிப்போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்பார். போட்டியில் அரியானாவை சேர்ந்த மீனாட்சி சௌத்ரி, ஆந்திராவை சேர்ந்த ஷ்ரேயா ராவ் ஆகியோர் முறையே 2-வது மற்றும் 3-வது இடங்களை பிடித்தார்கள். அனு கீர்த்திவாஸ் நடன கலைஞரும் மற்றும் தடகள வீரரும் ஆவார். இந்திய அழகி பட்டத்தை வென்று உலக அழகி போட்டிக்கு செல்லும் அனு கீர்த்திக்கு பல்வேறு தரப்பில் பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.