கமல் இன்னும் முழு அரசியல்வாதி ஆகவில்லை என மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய குமரவேல் பேட்டியளித்துள்ளார்.
கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும், 18 சட்டமன்றத் தொகுதிகள் இடைத்தேர்தலிலும் போட்டியிட தயாராகி வருகிறது. வரும் 24-ம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்படுகிறார்கள். கட்சியில் கடலூர் மற்றும் நாகை பொறுப்பாளராக இருந்த சி.கே. குமரவேல் இன்று திடீரென விலகுவதாக கூறினார். அதற்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கடலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட இருந்தவர் என தகவல் வெளியாகியது.
அவருடைய ராஜினாமாவை ஏற்ற மக்கள் நீதி மய்யம், கட்சியின் கட்டுப்பாடுகளை மீறும் செயல்களை எவ்விதத்திலும் அனுமதிப்பதில்லை. வேட்பாளர்கள் நேர்காணல் முடியும் முன்னே தன்னை வேட்பாளராக அறிவித்தது கட்சிக்கு முரண்பாடான செயல் என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய குமரவேல், மக்கள் நீதி மய்யம் கட்சி முரணாக உள்ளது. கட்சியில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் ராஜினாமா செய்தேன். கமல்ஹாசனை சூழ்ந்துள்ளவர்கள் அவருக்கு தவறான வழிகாட்டுதலை வழங்குகின்றனர். அதை ஏற்றுக்கொண்டு கமல் செயல்படுகிறார். கமல் முழுநேர அரசியல்வாதியாக கமல்ஹாசன் செயல்படவில்லை, சினிமா, அரசியல் என இரண்டு பாதைகளில் செல்கிறார் என கூறியுள்ளார்.