உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு இதுவரை சீனாவில் 25 பேர் பலியாகி உள்ளனர். 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மத்திய சீன நகரமான வுஹான் நகரில்தான் முதன் முதலாக கொரோனா வைரஸ் காய்ச்சல் கண்டறியப்பட்டது. சீனா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் அந்த வைரஸ் ஆசியாவின் இதர நாடுகளுக்கும் வேகமாகப் பரவி வருகிறது. வைரஸ் எங்கிருந்து பரவியது என்பது குறித்து சீனாவில் வீ ஜி நகரில் உள்ள பெக்கிங் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர்.
வீட்டு விலங்குகள் மொத்தமாக விற்பனை செய்யும் மொத்த சந்தைகள், கடல் உணவுகள் விற்பனை நிலையங்கள், கோழிகள், பாம்புகள், வவ்வால்கள், பண்ணை விலங்குகள் ஆகியவை விற்பனை செய்யும் இடங்களில் இருந்து வைரஸ் பரவி இருக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது
பெக்கிங் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் வெளியிட்ட ஜர்னல் ஆப் மெடிக்கல் வைராலாஜியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- “சீனாவை தற்போது அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதியிலேயே வுஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிவிட்டது.
இப்போது சீனா மட்டுமல்லாது, ஹாங்காங், சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான் நாடுகளிலும் பரவியுள்ளது. பல்வேறுவிதமான வாழிடங்களில் இருக்கும் கொரோனா வைரஸ்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, வவ்வால்களில் இருந்து வந்தவை என்றும் மற்றொரு அறிந்து கொள்ள முடியாத இடத்திலிருந்து வந்தவை என்றும் ஆய்வில் தெரிகிறது. இந்த வைரஸின் தன்மையை உறுதியாகத் தீர்மானிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. அந்த வைரஸின் மூலக்கூறுகள் குறுக்கும் நெடுக்கமாக இருப்பதால் இதைப் புரிந்து கொள்வதிலும் சிக்கல் நிலவுகிறது.
இந்த புதிய வைரஸ், மனிதர்களை பாதித்தவுடன் செல்களை தாக்கி, பலவீனப்படுத்தி பிற நோய்களையும், தொற்றுநோய்களையும் எளிதாக கொண்டுவருவதற்கு உதவுகின்றன. எங்களின் ஆய்வுகளை தீவிரப்படுத்தியதில், இந்த கொரோனா வைரஸ், பாம்புகளில் இருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்பதற்கான அதிகமான சான்றுகள் கிடைத்து உள்ளன. பாம்புகளின் உடலில் இருக்கும் செல்களும், இந்த வைரஸில் உள்ள செல்களுக்கும் அதிகமான ஒற்றுமை இருக்கின்றன. இதனால், இந்த வைரஸ் பாம்பின் மூலம் மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் எனத் தெரியவருகிறது.
முதல் முறையாகப் பாம்புகளில் இருந்து மனிதர்களுக்கு ஒரு வைரஸ் பரவுவது இதுதான் முதல் முறை என்று கருதுகிறோம். எங்களுடைய இந்த புதிய கண்டுபிடிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், அதனைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான வழிகளையும் நாங்கள் ஆய்வு செய்வோம் எனக் கூறப்பட்டுள்ளது.