பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டாலும் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள விரும்பாத பாகிஸ்தான் தொடர்ச்சியாக இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாதிகளை வளர்த்து வருகிறது.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும்பாலான பகுதியை அந்நாட்டு ராணுவம் பயங்கரவாத பயிற்சிக்கு ஆக்கிரமித்து உள்ளது. இதனை அப்பகுதி மக்கள் கடுமையான போராட்டங்களால் எதிர்க்கிறார்கள். மீடியா சுதந்திரம் கேள்விக்குறியான பாகிஸ்தானிலிருந்து இதுதொடர்பான செய்திகள் வெளியாவது அரிதானது.
இந்நிலையில் உலகையே திரும்பி பார்க்க செய்யும் வகையிலான ஒரு போராட்டம் நடைபெற உள்ளது.
ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது. இதனையொட்டி பாகிஸ்தான் சிறுபான்மையினரால் அங்கு மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட உள்ளது. அங்கு வைக்கப்பட்டுள்ள போஸ்டரில் ‘ பாகிஸ்தான் ராணுவம் சர்வதேச பயங்கரவாதத்தின் மையம்…’ என்ற வாசகம் இடம்பெற்று உள்ளது.
பயங்கரவாத அமைப்புகளை வளர்ப்பதில் பாகிஸ்தான் ராணுவத்தின் தலையீட்டை எதிர்த்து பாகிஸ்தான் சிறுபான்மையின மக்கள் நல ஆர்வலர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். பயங்கரவாத விஷயத்தில் ஐ.நா பாகிஸ்தானை கண்டிக்க வேண்டும், இதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் அங்கு சட்டத்தின் ஆட்சியை நிறுவ வேண்டும் என்று ஆர்வலர்கள் கோருகின்றனர்.