இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அத்தியாவசிய தேவைகளை தவிர யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று அரசுக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள்ளது. இதனால் பல்வேறு முக்கிய கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. விழாக்கள் நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளிவாசல்களிலும் தொழுகை நடத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் பொதுமக்கள் வெளியே சுற்றும் சம்பவம் தொடர்ந்து காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தென்காசி நடுப்பேட்டையில் உள்ள பள்ளிவாசலில் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் தொழுகைக்காக நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் திரண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று, இப்படி கூட்டமாக கூடக்கூடாது, அனைவரும் வீட்டுக்கு செல்லுங்கள் என அங்கிருந்தவர்களை கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போலீசார் மீது நாற்காலிகள் வீசப்பட்டன. இதனால் கூட்டத்தை கலைக்கவும், தாக்குதலை தடுக்கவும் போலீசார் லேசான தடியடி நடத்தி உள்ளனர்.
இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தின்போது போலீசார் மீது கல்வீசப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் ஆடிவேல், சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இச்சம்பவம் தொடர்பாக தென்காசி போலீசார், 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் 4 பேரை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.