தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 621 பேராக உயர்ந்தது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் ஞாயிறு வரையில் கொரோனா வைரசால் 571 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 50 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 48 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் எனவும், மீதம் 2 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. அவர்கள் குறித்து தற்போது தான் விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 621 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 57 வயது பெண் ஞாயிறு இரவு அதிக மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த அழுத்தமும், சர்க்கரை நோயும் அதிகமாக காணப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் அவர் கடந்த மாதம் 20-ம் தேதி திருச்சிக்கு ரெயில் மூலம் சென்று வந்தது தெரியவந்துள்ளது. நேற்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருடைய சளி மற்றும் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா வைரசின் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரையில் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 574 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையை சேர்ந்த 15 பேரும், திருச்சியை சேர்ந்த 13 பேரும், திருப்பூரை சேர்ந்த 4 பேரும், கடலூர், நாமக்கல், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலா 3 பேரும், செங்கல்பட்டு, காஞ்சீபுரத்தை சேர்ந்த தலா 2 பேரும், கோவை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தமிழகத்தில் தற்போது 5 ஆயிரத்து 15 பேருக்கு சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு உள்ளன. அதில் 295 பேருக்கு ரத்த மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் வரவில்லை. தமிழக அரசு மருத்துவமனைகளில் நேற்று 1,766 பேர் கொரோனா நோய் தொற்று சந்தேகத்துடன் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கையில், வைரசினுடைய தாக்கம் அதிகரித்து கொண்டிருக்கிறது. இதை தடுப்பதற்கு ஒரே வழி நம்மை நாம் தனிமைப்படுத்தி கொள்வது மட்டும் தான். இந்த வைரஸ் பரவாமல் தடுக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்த வைரஸ் எளிதாக பரவக்கூடியது, இந்த வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பதை ஊடகம் மற்றும் பத்திரிகை நண்பர்கள், தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகள் வாயிலாக மக்களுக்கு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.