இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தும்மல், இருமல், சளி, காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்படும் என்று கூறப்பட்டது. ஆனால், இதுபோன்ற அறிகுறிகள் எதுவும் இல்லாமலே வைரஸ் தொற்று ஏற்படுகிறது. தற்போது அந்த விதமான எந்த அறிகுறிகளும் தென்படாமல் தொற்று இந்தியாவிலும் பரவுவதாக கண்டறியப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் கொரோனா தொற்று உள்ளவர்களில் 80 சதவீத பேருக்கு எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை என்று இந்திய விஞ்ஞானி ஒருவர் வேதனையோடு தெரிவித்து உள்ளார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானி கங்கா கேத்கர் கூறுகையில், ‘கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதம் பேருக்கு வைரஸ் நோய் தொற்றுக்கான எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அறிகுறி இல்லாதவர்களுக்கு தொற்று இருக்கிறதா? என்பதை கண்டறிவது சிரமமான காரியமாகும். எனவே, ஏற்கனவே தொற்று இருக்கும் நபர்களின் தொடர்பு நிலைகளை கொண்டு, அதன் தடங்களை அறிந்து அதன் வழியாகவே கண்டுபிடிக்க முடியும்.
சோதனை முறையில் வேறு எந்த மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது. பாதிப்பு எண்ணிக்கை இனி அதிகரிக்க வாய்ப்பு இருக்காது. மே 2-வது வாரத்தில் இதை சிறந்த முறையில் கணிக்க முடியும் எனக் கூறியுள்ளார்.