தமிழகத்தில் கொரோனா வைரசினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தலைநகர் சென்னை கொரோனாவின் பிடிக்குள் சிக்குகிறது என்பதை அரசின் புள்ளி விபரங்கள் காட்டுகிறது.
சென்னையில் 37 பேர் உள்பட தமிழகத்தில் 39 பேர் முதன்மை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் சமூக தொற்று ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சம் அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் கரம் உயருவதற்கு பொதுமக்களே காரணமாகும். அரசின் விழிப்புணர்வு நடவடிக்கைகளை பின்பற்றி உதவ மறுப்பதே கொரோனாவின் போக்குக்கு உதவுகிறது.
இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதித்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது. உயிரிழந்தவரின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்து உள்ளது.
இதுதொடபாக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 266 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 23 ஆக உயர்ந்து உள்ளது.
நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 187 பேர் ஆண்கள், 79 பேர் பெண்கள் ஆவர். இதுவரை தமிழகத்தில் 2 ஆயிரத்து 15 ஆண்கள், 1,007 பெண்கள், ஒரு 3-ம் பாலினத்தவர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் தமிழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து 1,379 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர். நேற்று ஒரே நாளில் 38 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர்.
266 பேரில், சென்னையில் 3 வயது குழந்தை உள்ளிட்ட 7 குழந்தைகள் மற்றும் 196 பேரும், விழுப்புரத்தில் 3 வயது பெண் குழந்தை உள்பட 2 குழந்தைகள் மற்றும் 31 பேரும், கடலூரில் 11 வயது பெண் குழந்தை உள்பட 9 பேரும், கள்ளக்குறிச்சியில் 6 பேரும், கோவையில் 10 வயது ஆண் குழந்தை உள்பட 4 பேரும், மதுரை, தென்காசி, திருவள்ளூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் 12 மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாகவும் சிவப்பு மண்டலம் (ஹாட்ஸ்பாட்), 24 மாவட்டங்கள் மிதமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், ஒரு மாவட்டம் பச்சை மாவட்டமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதுக்கு உட்பட்ட 11 குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.