தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை, மற்றும் தேனி மாவட்டங்களில் சில பகுதிகளிலும் உள்ள தாழ்வழுத்த மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்தவேண்டிய கடைசி தேதி கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இருப்பின், அவர்களுக்கு கடந்த 15-ந்தேதி கட்டணம் செலுத்த கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு வருகிற 30-ந்தேதிக்குள் கட்டணத்தை செலுத்தலாம் என தமிழக மின்சார வாரியம் அறிவிப்பு.
மேலும், தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நோய்க் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் தாழ்வழுத்த மின் நுகர்வோர்கள் தங்கள் பகுதிகளில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட உள்ள தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்தலாம்.
தொகை சரிசெய்யப்படும்

மின்சார கணக்கீடு தொடர்பாக மக்களுக்கு எழுந்த சில சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது நான்கு மாத காலத்திற்கான மின்நுகர்வு இரண்டு மாதங்களுக்கான விகிதப்படி சமமாக பிரிக்கப்பட்டுள்ளது.
கணக்கீடு செய்யும்போது அதில் தனித்தனியே ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கான நுகர்விலும் தலா 100 யூனிட்டுகள் இலவச மின்சாரம் அளிக்கப்பட்டு, செலுத்த வேண்டிய தொகை கணக்கிடப்பட்டுள்ளது.
அவ்வாறு கணக்கீடு செய்யப்பட்ட தொகையில், ஏற்கனவே மார்ச், ஏப்ரல் மாதங்களில் முந்தைய மாத மின்கணக்கீட்டின்படி செலுத்தப்பட்ட தொகையானது கழிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கீடு செய்ததில் ஏற்கனவே செலுத்தப்பட்ட தொகை அதிகமாக இருப்பின், நுகர்வோரின் எதிர்வரும் கணக்கீட்டில் அந்தத் தொகை சரிசெய்யப்படும் என மின்சார வாரியம் அறிக்கையில் விளக்கம்.